செங்கொடி - வெளியீட்டு விழாவில் தலைமை உரை
அனைவருக்கும் வணக்கம், தஞ்சாவூர், புதுக்கோட்டை எனும் இரு நிலப்பரப்புகளாலும் ஒதுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட கந்தர்வகோட்டை மண்ணிலிருந்து ஒரு பெண் படைப்பாளர் நாவலாசிரியராக பரிமாணம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் மொழியில் ரணம், ஈரம், இரத்தம், கண்ணீர், துக்கம், துயரம், பலி, ஏமாற்றம், எழுச்சி, போராட்டம்,... இத்தனை உணர்வுகளையும் தாங்கி செங்கொடி எனும் நாவல் வெளிவந்திருக்கிறது. மனுசியபுத்திரியும் தேவனும் எனும் புனைபெயரில் எழுதிவரும் முனைவர் ந. சுலோச்சனா அவர்கள் இந்த நாவலை வெளிக்கொணர்ந்திருக்கிறார். தமிழ் எழுத்துலகில் நீண்ட புனைபெயரைக் கொண்டு எழுதிவருகிறவர் இவர்தான். எம்.ஆர். நடராஜன் எனும் பொதுவுடைமை மனிதரின் புத்திரி சுலோச்சனா அவர்கள் சகாதேவன் எனும் இலக்கிய மனிதரைக் கரம் பிடித்ததன் விளைவாக மனுசியபுத்திரியும் தேவனும் ஆனார். இதற்கு முன்பு அவர் அன்புள்ள தோழி, அது ஒரு கனாக்காலம், பாலை என்று மூன்று கவிதை தொகுப்புகளைத் தொடர்ந்து இந்த செங்கொடி எனும் நாவலை எழுதியிருக்கிறார். இவர் மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணை பேராசிரியராகவும், த...